கூட்டணி இறுதி செய்யும் முன்னே அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிட வாய்ப்பு..

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட, விருப்ப மனு அளித்தவர்களிடம் ஒரே கட்டமாக நேற்று நேர்காணல் நடைபெற்றது. இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் மாவட்டச் செயலாளர்களை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

தங்கள் மாவட்டத்திற்குள் உள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அந்த மாவட்ட செயலாளர்கள் அதிமுக தலைமையிடம் வழங்க உள்ளனர். அதனை பரிசீலித்து வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள வேட்பாளரை அதிமுக தலைமை தேர்வு செய்ய உள்ளது.
இந்நிலையில், கூட்டணி கட்சிகளின் இடங்களை இறுதி செய்யும் முன்னே அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
முதற்கட்டமாக மூத்த தலைவர்கள், முக்கிய அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை மட்டும் வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த வேட்பாளர் பட்டியலுக்கு ஆட்சிமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.