ஜெ.மரணம் —– அறிக்கை கொடுக்கச் சொன்னது யார்?: ஆறுமுகசாமி ஆணையம் கேள்வி

ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதிலிருந்து உயிரிழந்த வரையில் பதிவான அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஏழு நாட்களுக்குள் சமர்பிக்க அப்போலோ மருத்துவமனைக்கு, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், அப்போலோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் இன்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம், நீதிபதி ஆறுமுகசாமி சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். செப்டம்பர் 22ஆம் தேதி ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாளில் பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டதாக ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அப்போலோ ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், நீர்ச்சத்து குறைபாட்டினால் தான் பாதிப்பு என செப்டம்பர் 23ஆம் தேதி அறிக்கை வெளியிட காரணம் என்ன? என்றும், அவ்வாறு அறிக்கை கொடுக்கச் சொன்னது யார்? என்றும் ஆறுமுகசாமி வினா தொடுத்துள்ளார்.

பல உடலுறுப்புகளில் பிரச்னையோடு அனுமதிக்கப்பட்ட நிலையில் “அவர் விரும்பும் நாளில் வீடு திரும்புவார்” என செய்தியாளர்களிடம் அப்போலோ நிர்வாகம் சொல்லியது ஏன்? என்றும், அப்படி யார் சொல்ல சொன்னது..? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்விகளுக்கு அப்போலோ நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் மழுப்பாலகவே பதில் அளித்ததாகவே கூறப்படுகிறது.

சிகிச்சை அளித்த மருத்துவக் குழு தரப்பில் இருந்து அறிக்கை தயாரித்து கொடுத்ததாகவும், அதில் தாம் கையெழுத்திட்டு மட்டுமே வெளியிட்டதாகவும், நிகழ்வின் உண்மை தன்மை குறித்து தாம் அறிந்திருக்கவில்லை என்றும் சுப்பையா விஸ்வநாதன் விசாரணை ஆணையத்தில் தெரிவித்திருக்கிறார். வேறு அறைக்கு மாற்றப்பட்டபோதும், சில பரிசோதனைகளுக்காக அழைத்துச் சொல்லப்பட்டபோதும் மட்டுமே, சிசிடிவி பதிவுகள் நிறுத்தப்பட்டதாக சுப்பையா விஸ்வநாதன் கூறியிருக்கிறார்.

அப்போது,  சிசிடிவி காட்சி பதிவுகளை நிறுத்தச் சொன்னது யார்….? என நீதிபதி ஆறுமுகசாமி கேள்வி எழுப்பினார்… அதுபற்றி தமக்கு தெரியாது என சுப்பையா விஸ்வநாதன் பதில் அளித்தார். ஜெயலலிதா சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட செம்ப்டம்பர் 22ஆம் தேதி முதல், உயிரிழந்த டிசம்பர் 5ஆம் தேதி வரை, பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளை, இன்றிலிருந்து 7 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும் என்று, அப்போலோ மருத்துவமனைக்கு, ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

 

Arumugasamy commission raise questions