அருவி- திரைவிமர்சனம்..

அருவி- திரைவிமர்சனம்..


தமிழ் சினிமாவில் ஒரு சிலர் மட்டுமே பணம், பிஸினஸ் தாண்டி கலைக்காக படம் எடுப்பவர்கள். அப்படி தொடர்ந்து ஜோக்கர், தீரன் என தரமான படத்தை கொடுத்து வரும் Dream Warriors நிறுவனத்தின் அடுத்த படைப்பு தான் இந்த அருவி, அருவியும் தரமான படமாக வந்துள்ளதா? பார்ப்போம்.

கதைக்கரு
அருவி முதல் காட்சியிலேயே தீவிரவாதி என்று விசாரணை நடத்தப்படுகின்றாள். அதை தொடர்ந்து ஒவ்வொருத்தரும் அருவி யார் என்று சொல்ல ஆரம்பிக்க அப்படியே கதை தொடங்குகின்றது.

அருவி சிறு வயதிலிருந்தே சுதந்திரமாக வளரும் ஒரு பெண், அப்பா கொடுத்த முழு சுதந்திரத்தோடு வளரும் அவளுக்கு மிகப்பெரும் ஒரு துன்பம் வர, வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாகின்றது.

அதன் பிறகு இந்த சமூகத்தின் மீதுள்ள கோபம், தான் வாழ்க்கையில் சந்தித்த சோகம் என்று அனைத்தையும் சொல்ல ஒரு தொலைக்காட்சிக்கு வர அங்கு பல அதிர்ச்சிகரமான தகவலை அருவி சொல்ல, அதை தொடர்ந்து நடக்கும் பரபரப்பான சுவாரஸ்யமான, உணர்வுப்பூர்வமான காட்சிகளே மீதிக்கதை.

படம் ஒரு பார்வை
அருவி யாருடா இந்த பெண்? என்று ஒவ்வொருவரையும் புருவம் உயர்த்த வைக்கின்றார். முதல் படம் என்று சத்தியம் செய்தால் கூட யாரும் நம்ப மாட்டார்கள், அதிதி பாலன் தமிழ் சினிமாவிற்கு ரெட் கார்பெட் போட்டு வரவேற்கலாம். அதிலும் இந்த உலகத்தில் வாழ பணம் மட்டும் தான் தேவை என்று பேசும் காட்சிகள் விஜய், அஜித் படத்திற்கு சமமாக கைத்தட்டல் பறக்கின்றது. தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியை மையமாக வைத்தே படம் சுற்றி வருகின்றது. நம் கண்களுக்கு தெரியாத பல உண்மைகளை இயக்குனர் அருண் பிரபு உடைத்து வெளியே கொண்டு வந்துள்ளார். அதிலும், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவோரை பற்றி காட்டியுள்ளார்கள் பாருங்கள், திரையரங்கமே சிரிப்பு சத்தத்தில் அதிர்கின்றது. அந்த நிகழ்ச்சியின் பெயர் ‘சொல்வதெல்லாம் சத்தியம்’ எந்த நிகழ்ச்சி என்பதை நீங்களே புரிந்துக்கொள்ளுங்கள்.

படத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் என்றாலும் வெறுமென புரட்சி மட்டும் பேசாமல் அதை காட்சிகளாக அருண் எடுத்த விதம் சபாஷ். அதிலும் இரண்டாம் பாதியில் அனைத்து ஆண்களையும் அழ வைத்து அருவி சிரிக்கும் காட்சி செம்ம கிளாஸ்.

படத்தின் வசனம் குறிப்பிட்டு சொல்லியே ஆகவேண்டும், படம் முழுவதும் அருவிக்கு உதவியாக ஒரு திருநங்கை வருகின்றார். அவரும் மிகவும் யதார்த்தமான சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதிலும் ‘உலக அழகி போனால் கூட பார்க்காதவர்கள், ஏன் அரவாணி சென்றால் இப்படி பார்க்கின்றார்கள்’ என கேட்கும் காட்சி இன்றைய சமுதாயத்திற்கு சவுக்கடி.

இசை ஆரம்பத்தில் பாடல்களாகவே தான் பல காட்சிகள் வருகின்றது, ஆனால், எந்த இடத்திலும் அலுப்பு தட்டவில்லை, Shelley Calist ஒளிப்பதிவு ஏதோ நாமே அந்த இடத்தில் இருப்பது போல் அத்தனை லைவ்வாக படம் பிடித்துள்ளார்.

ப்ளஸ்
படத்தின் கதை மற்றும் அதை அழகாக கொண்டு சென்ற திரைக்கதை.

அருவி மற்றும் படத்தில் நடித்த சின்ன சின்ன கதாபாத்திரம் கூட ஏதோ ஒரு வகையில் ரசிக்க வைக்கின்றது.

படத்தின் பல காட்சிகள் அதிலும் ஒரு பணியார கிளவி கதை சொல்பவர், அதை சொல்லும் விதம் என மிக உணர்ச்சிகரமாக உள்ளது.

மைனஸ்
சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை.

மொத்தத்தில் அருவி தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்டம்.