ஆசிய மண்டல பொருளாதார கூட்டு வர்த்தக ஒப்பந்தம் : இந்தியா நிராகரிப்பு

ஆசிய மண்டல பொருளாதார கூட்டு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுத்துள்ளது. இந்தியர்களின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஆசியான் கூட்டமைப்பில் உள்ள 10 நாடுகளுடன், இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 6 நாடுகளும் பங்கேற்கும் ஆசிய மண்டல பொருளாதார கூட்டு மாநாடு பாங்காக்கில் நடைபெற்றது.

அதில் 16 நாடுகளும் இணைந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை எட்டும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தின.

இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து மலிவான விவசாய உற்பத்திப் பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் இந்திய சந்தையில் குவிந்து,

உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் ஏற்படும் என விவசாயிகளும், வணிகர்களும் அச்சம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் பாங்காக் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இது போன்ற முக்கிய முடிவுகளில் இந்திய விவசாயிகள், வர்த்தகர்கள், தொழில்துறையினரின் நலனுக்கும் முக்கிய பங்கிருப்பதாக கூறினார்.

இந்தியாவை மிகப்பெரிய சந்தையாக உருவாக்கிய பணியாளர்களும், நுகர்வோரும் சமஅளவில் முக்கியத்துவம் பெறுவதாக அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் அனைத்து இந்தியர்கள் நலன் சார்ந்தே முடிவெடுக்க வேண்டும் என்பதால், வர்த்தக ஒப்பந்தம் குறித்து சாதகமான பதிலை தன்னால் அளிக்க முடியவில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, கூட்டுறவு வர்த்தக ஒப்பந்தம் தனது உண்மையான நோக்கத்தை பிரதிபலிக்கவில்லை எனவும்,

ஒப்பந்தத்தின் முடிவுகள் நியாயமற்றதாக இருப்பதாகவும் இந்தியா தனது கவலையை வெளிப்படுத்தியதாக வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளர் விஜய்தாக்குர் சிங் தெரிவித்தார்.

எனவே ஆசிய மண்டல பொருளாதார கூட்டு வணிக ஒப்பந்தத்தில் இணைய முடியாது என்ற முடிவை என்று தெரிவித்து விட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் முக்கிய நலன்கள் சார்ந்த விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.