வங்கிகள் கடன் வழங்க மறுத்தால் புகார் செய்யலாம் : நிர்மலா சீதாராமன்…

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்க மறுத்தால் புகார் செய்யலாம் என நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்.
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார்.
அவர் பேசியதாவது:-

ஓட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள், கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அவை தங்கள் கடன்களை மறுசீரமைக்க வேண்டும் அல்லது கடன் தவணை செலுத்தும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளன.

இந்த கோரிக்கையை நிறைவேற்ற ரிசர்வ் வங்கியுடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

அவசரகால கடன் உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கடன் பெறுவதில் சிக்கல் நிலவுவதாக இந்த கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர். அந்த திட்டத்தின்கீழ் கடன் வழங்க வங்கிகள் மறுக்க முடியாது. அப்படி மறுத்தால், அதுகுறித்து புகார் தெரிவிக்கலாம். நான் கவனிக்கிறேன்.

உடல் ஆரோக்கியம் சார்ந்த பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.யை குறைப்பது பற்றி ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் பேசினார்.