பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி : ஸ்டாலினை சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு..

பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியாக திமுக தலைவர் மு.க ஸ்டாலினை நாளை மறுநாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேச உள்ளார்.

மக்களவைத் தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ள நிலையில், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சியினர் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பாணர்ஜி, ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் இதற்கான பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்த சந்திரபாபு நாயுடு, பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் உடன் கை கோர்ப்பதாக அறிவித்தார்.

பாஜகவை வீழ்த்த நாடு முழுவதும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதன் அடுத்த கட்டமாக, நாளை மறுநாள் சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேச உள்ளார்.

அதற்கு அடுத்த நாள் (9-ம் தேதி) கர்நாடக முதல்வர் குமாரசாமியையும் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேச உள்ளார்.