இடைத்தேர்தல்கள் நடத்துவதைவிட முழு சட்டமன்றத் தேர்தலை நடத்தலாம் : ப.சிதம்பரம்..

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதைவிட முழு சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்தலாம் என ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், 18 பேரையும் சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என தெரிவித்தது.

அத்துடன் 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையையும் நீக்கியது. ஏற்கனவே 2 தொகுதிகள் காலியாக உள்ளன.

எனவே, அதனுடன் சேர்த்து 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதேபோல், 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வந்தாலை தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று டிடிவி தினகரன் தரப்பும் உறுதியாக கூறி வருகிறது. தங்களுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருப்பதாக திமுக கூறியுள்ளது.

ஆனால் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் இந்த விஷயத்தில் மாறுபட்ட கருத்தை கூறியுள்ளார். ‘இன்றைய உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்துவதைத் தவிர்க்க முடியாது.

18+2 தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடத்துவதை விட, முழு சட்டமன்றத் தேர்தலை நடத்துவதே முறையாகும்’ என ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.