“குழந்தையைக் கொன்றுவிட்டு தெய்வத்தை எங்கே தேடுகிறீர்கள்?” : பாரதிராஜா கேள்வி..


‘குழந்தையைக் கொன்றுவிட்டு தெய்வத்தை எங்கே தேடுகிறீர்கள்?’ என இயக்குநர் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறுமி ஆசிஃபா வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் தங்களுடைய எதிர்ப்புகளைத் தெரிவித்துவரும் நிலையில், இயக்குநர் பாரதிராஜாவும் தன்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

“குழந்தையும் தெய்வமும் ஒன்றுதான் என்றால், ஆசிஃபா என்ற குழந்தையை வன்புணர்வு செய்து கொன்றுவிட்டு, தெய்வத்தை எங்கு போய்த் தேடுகிறீர்கள்? ‘அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்ற சொல் யாருக்குப் பொருந்தும்?

காவல்துறை, குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கிறது. நீதிமன்றங்கள், நீதியை நிராகரிக்கின்றன. சுதந்திர இந்தியாவில் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள், சுயநலமற்றுச் செயல்படுங்கள். நடக்கும் பிர்ச்சினைகளை, தங்களுக்கானது என்று நினையுங்கள்.

வாழும் பூமியைப் ‘பாரத மாதா’ என்றும், ஓடும் நதிகளுக்குப் பெண்பால் பெயர்களைச் சூட்டியும் பூஜிக்கும் நாம், பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் கவனமற்றுக் கிடக்கிறோம்.

கண்ணுக்குத் தெரிந்து பாதிக்கப்பட்ட ஆசிஃபாக்கள் குறைவுதான். அவர்களுக்கே தண்டனை தரத் தாமதமாகும்போது, கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ குழந்தைகள் வன்புணர்வுக்கு ஆளாகி மடிகிறார்கள். இந்த இழிநிலை இன்னும் தொடர வேண்டாம். குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுப்பதும், அவர்களைத் தண்டிப்பதும், அரசாங்கமும் நீதிமன்றமும் தான். இதை நீங்கள் செய்யத் தவறினால், உலக நாடுகளில் இந்தியா தூக்கிலிடப்படும் என்பதை உறுதியாக சொல்லிக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் பாரதிராஜா.