டிச., 16 முதல் தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..

டிசம்பர் 16 முதல் தமிழகம் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அந்த வகையில் கடந்த மாதம் 24-ந்தேதி நிவர் புயல் காரணமாகவும், அதன் தொடர்ச்சியாக வங்கக்கடலில் புரெவி புயல் உருவாகி தமிழகம் அருகே தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலையே நீடித்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இனி வரக்கூடிய 2 நாட்களும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

மேலும் வடகிழக்குப் பருவக்காற்று, தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி ஆகியவற்றின் காரணமாக வரும் 16ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்குத் தமிழகம், புதுச்சேரி காரைக்காலில் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் ஒரு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.