மக்களுக்காக போராடும் கட்சிகளுடன் கொள்கைக்காகவே திமுக கூட்டணி அமைத்துள்ளது : மு.க.ஸ்டாலின்

மக்களுக்காக போராடும் கட்சிகளுடன் கொள்கைக்காகவே திமுக கூட்டணி அமைத்துள்ளது என்று அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

விழுப்புரம், செஞ்சி ஆரணி உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆதரவு திரட்டினார்.

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் போட்டியிடும் ரவிக்குமாரை ஆதரித்து விழுப்புரத்தில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

விக்கிரவாண்டி பகுதிக்கு வந்த மு.க. ஸ்டாலின்,அதிமுக துண்டு அணிந்திருந்த தொண்டர் ஒருவரிடமும் புன்னகையுடன் கைலுக்கி அவர் வாக்கு சேகரித்தார்.

விழுப்புரத்தில் பேசிய அவர், மத்திய அரசில் திமுக அங்கம் வகித்த போது நிறைவேற்றப்பட்ட பல திட்டங்களை நினைவு கூர்ந்தார்.

திமுக ஆட்சியின் போது செய்யப்பட்ட பல திட்டங்களை அவர் பட்டியலிட்டார். வன்னியர் உள்ளிட்ட சமூகத்தினருக்கு 20 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதும் திமுக தான் என அவர் குறிப்பிட்டார்.

ஆரணி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத்தை ஆதரித்து செஞ்சி நான்கு முனை சந்திப்பில் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து விஷ்ணுபிரசாத்தை ஆதரித்து இரும்பேட்டில் நேற்று இரவு நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், மத்திய அரசை விமர்சித்து எதிர்க்கட்சிகள் எதை சொன்னாலும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தப்படுவதாக குற்றம்சாட்டினார்.

திராவிட கட்சிகள், பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர மாட்டோம் என்று கூறி விட்டு, பாமக நிறுவனர் ராமதாஸ் தற்போது அதிமுக கூட்டணியில் சேர்ந்துள்ளதாக அவர் விமர்சித்தார்.

ஆனால், கொள்கைக்காக தோழமை கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.