பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளஉயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 10% இடஒதுக்கீடு அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மீறுவதாக இல்லை; இந்த இடஒதுக்கீட்டின் கீழ் குறிப்பிட்ட பிரிவினரை சேர்த்து மற்றவர்களை விடுவித்தது விதிமீறல் இல்லை என நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தீர்ப்பு வழங்கினார். நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தீர்ப்புக்கு நீதிபதி பேலா திரிவேதி, நீதிபதி பர்திவாலா ஆதரவு தெரிவித்துள்ளனர்.
10 சதவிகித இடஒதுக்கீட்டை 3 நீதிபதிகள் உறுதிசெய்த நிலையில், தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதி ரவீந்திர பட் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். இட ஒதுக்கீடு என்பது சமூகத்தில் பின்தங்கிய உரிய அங்கீகாரம் இல்லாதவர்களுக்கானது என்ற நிலை என்பதை விடுத்து பொருளாதார அடிப்படையிலான நோக்கத்திற்கு மாற்றுகிறது” என்று நீதிபதி ரவீந்திர பட் தெரிவித்தார்.
இதனையடுத்து தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட் தீர்ப்புடன் ஒத்துப்போகிறேன், இந்த சட்டத் திருத்தம் செல்லாது என்பதே எனது தீர்ப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்புக்கான திட்டம் அல்ல என பி.வில்சன் கூறியுள்ளார். உயர்சாதியினருக்கு வழங்கப்படும் 10% இட ஒதுக்கீட்டால் மற்ற சமூகத்தினர் பாதிக்கப்படுவதாக பி.வில்சன் கருத்து தெரிவித்தார்.