வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து முடிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..

வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆய்வு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில்அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கே.ஆர்.பெரிய கருப்பன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி, மா.சுப்பிரமணியன், பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, வருவாய் ஆணையர் எஸ்.கே. பிரபாகர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் மற்றும் அரசு துறை செயலாளர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள பல்வேறு அறிவுரைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த ஆய்வு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
‘வருமுன் காப்பதே அரசு, வந்த பின் திட்டமிடுவது இழுக்கு’ என்ற அடிப்படையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆலோசனைக் கூட்டத்தை நாம் நடத்தி இருக்கிறோம். இத்தகைய முன் எச்சரிக்கை கூட்டங்கள் தான் அவசிய, அவசரமானவை. அதனை அனைத்து அரசுத் துறைகளும் உணர்ந்திருப்பதை அறிந்து உள்ளபடியே பாராட்டுகிறேன். அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் இங்கு பேசிய அதிகாரிகள் அனைவரும் விரிவாக எடுத்து சொன்னீர்கள். அனைத்துத் துறையும் தயார் நிலையில் இருப்பதை அறிந்து மன நிறைவடைகிறேன். கடந்த ஆண்டு நாம் ஆட்சிக்கு வந்தபோது பெருமழையைச் சந்தித்தோம்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நமக்கெல்லாம் பெரும் சவாலாகவே இருந்தது. மீண்டும் அதுபோன்ற ஒரு நிலை சென்னைக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்று நாம் அப்போது முடிவெடுத்தோம். அதற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டோம். இதற்கான வழிமுறைகளை அரசுக்கு எடுத்துரைக்க மரியாதைக்குரிய திருப்புகழ் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டு, அந்தக் குழு அளித்த ஆலோசனை படி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். சென்னை மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் எல்லாம் மேற்கொள்ளப்பட வேண்டிய வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் கண்டறியப்பட்டு, தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. அவ்வாறு தொடங்கப்பட்ட பணிகள் அனைத்தையும் மிக விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.