குட்கா விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் வழக்கு : நாளை தீர்ப்பு….

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியதை ரத்து செய்யக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. 2017ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி தமிழக சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததாக திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்எல்ஏக்களுக்கு பேரவை உரிமைக்குழு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியது. உரிமைக்குழு உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்து திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய மு.க.ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாக கூறி அதை ரத்து செய்தது.

இதையடுத்து மீண்டும் கூடிய உரிமைக்குழு, இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். தனி நீதிபதி விதித்த தடையை நீக்கக் கோரி சட்டப்பேரவை செயலாளர் மற்றும் உரிமைக்குழு சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா முன்பு விசாரணைக்கு வந்தபோது, பாராளுமன்றம் எது உரிமை, உரிமை மீறல் என்பதை வரையறை செய்யவில்லை. குட்கா பொருட்கள் விற்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்ட தான் பேரவைக்கு குட்கா கொண்டு சென்றனர் என மு.க.ஸ்டாலின் தரப்பில் வாதிடப்பட்டது. சட்டப்பேரவை செயலாளர் சார்பில் அவையின் செயல்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் எது வேண்டுமானாலும் உரிமை மீறல் என கருதலாம், சட்டப்பேரவை நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது என வாதிட்டார்.

இந்நிலையில், இன்று இடைக்கால தடையை நீக்கக்கோரி பேரவை செயலாளர், உரிமைக்குழு சார்பில் தாக்கல் செய்த மனுவின் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை நாளை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.