ஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்

ஹேப்பி நியூ இயர்…

டிசம்பர் 31, 2017

இரு ஆண்டுகளாக புத்தாண்டு தினங்களை கே.கே.நகர், டிஸ்கவரி புக் பேலஸ் புத்தகத் திருவிழாக்களுடன் கடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இம்முறையும் அப்படித்தான்.

அன்று காலையில், ஜா. தீபா மொழிபெயர்ந்த ஒளி வித்தகர்கள்
நூல் வெளியீட்டு விழா. குடும்பம், நண்பர்கள், படைப்பாளர்களால் அரங்கம் நிரம்பியிருந்தது. டிஸ்லகரி வேடியப்பன் வரவேற்புரையுடன் தொடங்கியது.

மும்பையில் இருந்து வந்திருந்த திரைப்பட விமர்சகர் மதியழகன் சுப்பையா, நாம் எப்படி சினிமாவைப் புரிந்துகொள்கிறோம் என்பதை வெகு எதார்த்தமாகப் பேசினார். ஒளிப்பதிவாளர்களுக்கான முக்கியத்துவம் காலங்காலமாக தமிழ் சினிமாவில் அளிக்கப்படவில்லை என்றார்.

ஒளிப்பதிவாளர் மார்டின் தன்ராஜ், படப்பிடிப்புத் தளத்தில் சர்வதேச ஒளிப்பதிவாளர்கள் செயல்படும் விதங்களை தன் சொந்த 
அனுபவங்களுடன் கலந்து எளிமையான வார்த்தைகளில் பகிர்ந்துகொண்டார். அவ்வளவுதான் என்று கூறி வேறென்ன பேசுவது என்று சிரித்துக்கொண்டே பேச்சை முடித்தார்.

பத்திரிகையாளர் கே.என். சிவராமன், ஒரு உதவி இயக்குநராக தீபா அறிமுகமான காலம் தொடங்கி இன்றைய நிலை வரையில் சுவையாக எடுத்துக்கூறினார். ஒளிப்பதிவுக் கலை குறித்து பயிற்சி முகாம் நடத்தினால் அதற்கான செலவை ஏற்றுக்கொள்வதாக உற்சாகத்துடன் தெரிவித்தார்.

இயக்குநர் சார்லஸ் பேச்சு மிக விரிவான தளத்தில் அமைந்திருந்தது. நூலில் எழுதப்படாத அசோக் மேத்தா என்ற புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரின் ஆளுமை மற்றும் வாழ்க்கையைப் பற்றி விவரித்தார். மேலும் பல சர்வதேச ஒளிப்பதிவுக் கலைஞர்களின் தனித்துவம் குறித்துப் பேசியது சிறப்பு.

ஒளி வித்தகர்கள் நூலை மொழிபெயர்க்கவேண்டிய தேவையையும் மொழிபெயர்த்த காலகட்டத்தையும் குறிப்பிட்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்ட தீபா, புத்தகம் எழுதுவதற்கான உத்வேகம் கொடுத்த கணவர் அய்யப்பனின் பேருதவியையும் குறிப்பிட்டு நெகிழ்ந்தார் ஏற்புரையில்.

மாலையில் வெங்கட்ராமன் ரசித்துப் பாடிய பாரதி பாடல்களுடன் தொடங்கியது புத்தாண்டு இரவு கொண்டாட்டம். முதல் நிகழ்ச்சியாக வொய்டுஆங்கிள் ரவிசங்கரன், எழுத்தாளர்களை படமெடுத்த 
அற்புத தருணங்கள் பற்றி உரையாடினார்.

ஏற்கெனவே பார்த்துப் பழகிய வழக்கமான புகைப்படங்கள் எடுப்பதில் இருந்து மாறி, புதிய கோணத்தில் கலைஞர் மு. கருணாநிதி, பிரபஞ்சன், வண்ணநிலவன், வைரமுத்து உள்ளிட்ட பலரை புகைப்படம் எடுத்த நாட்களில் மூழ்கினார். சில கேள்விகளுக்கும் பதிலளித்தார் ரவிசங்கரன்.

அடுத்து ராஜாசந்திரசேகர் எழுதிய கவிதைகளின் குறும்படங்கள் திரையிடப்பட்டன. சில நொடிகளில் வந்த அந்த ஒளிக்கவிதைகள் அற்புதம். காட்சிப் படிமங்கள்.

கார்ட்டூனிஸ்ட் ஹாசிப்கானின் சித்திரங்கள் அந்த ஒளித்துண்டுகளில் அழகியலுடன் பேசின. நடந்தன. பறந்தன. மனதில் நின்றன. திரையிடலுக்குப் பிறகு இருவரும் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.

கவிதையின் வாசிப்பு அனுபவத்தை இந்த காட்சிகள் கெடுக்காதா? என்று ஒருவர் கேட்க, இன்னொருவர், இது செலவு பிடிக்கும் வேலையாச்சே என்றார். சுவையான கேள்விகள்.

அடுத்துப் பேசவந்த எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, சமகால நாவல்கள் பற்றிப் பேச வந்தேன். இரண்டொரு நாட்களில் எப்படி அனைத்து நாவல்களையும் படிக்கமுடியும். எல்லோரையும் போலவே எனக்கும் வாசிப்பு குறைந்துவிட்டது. தினசரியின் வாழ்க்கை ஓட்டத்தில் எங்கே படிக்கமுடிகிறது. கேள்விகள் கேளுங்கள் கலந்துரையாடலாம் என்றார்.

எழுத்தாளர் பிரபஞ்சன் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். வாசகர் கூட்டம் மெல்ல கூடிக்கொண்டிருந்தது. ஒரு டீ குடிக்கலாம் என்று தோன்ற வெளியே வந்தேன். சாலையில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கியிருந்தது.

டூ வீலர்களின் ஹாரன்கள் புதுவிதமாக ஒலித்தன…

புகைப்படத்தில்: வேடியப்பன், சந்தியா நடராசன், ஹாசிப் கான், ராஜா சந்திரசேகர் மற்றும்