“அது நான் தான்; அந்த தவறை செய்திருக்க கூடாது” : 18 ஆண்டுகளுக்கு பிறகு மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 18 வருடத்திற்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் செய்த தவறை தற்போது உணர்ந்து அதற்காக செய்தியாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

கனடாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ம் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிக்கை ஜஸ்டின் ட்ரூடோ குறித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கருப்பான நிறத்தில் கருப்பினத்தவர் போல தோற்றம் அளிக்கிறார். இந்த புகைப்படத்தில் இருப்பது ஜஸ்டின் ட்ரூடோ என்று தெரிந்ததும் கனடா மக்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.

மேலும், பிறப்பால் ஒரு சமூகத்தின் தோற்றத்தைத் வைத்து உருவ கேலி செய்வது நல்லது அல்ல என அங்குள்ள சமூக அமைப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

அதுமட்டுமின்றி, தேர்தல் நேரத்தில் இந்த புகைப்படம் வெளியானதால் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று உணர்ந்தும், உண்மையாகவே இன வெறியை வெளிப்படுத்தும் விதத்தில் தவறை செய்திருக்கக்கூடாது

என வருந்தியும் விமானத்தில் பயணிக்கும் போது பத்திரிக்கையாளர் சந்திப்புக் கூட்டத்தை ஜஸ்டின் ட்ரூடோ ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த சந்திப்பின் போது, “அந்த புகைப்படத்தில் இருப்பது நான் தான். என்னுடைய 29-வது வயதில் வெஸ்ட் – பாயன்ட் – கிரே அகாடமி என்ற தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவந்தேன்.

அப்போது பள்ளியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்காக வித்தியாசமான முறையில் அனைவரும் வேடம் அணிந்துவர வேண்டும் என முடிவு எடுத்தோம்.

அதன்படி நானும் கறுப்பினத்தவர் போல வேடமணித்து சென்றேன். அந்த சமயத்தில் எடுத்தப்புகைப்படம் தற்போது பள்ளியின் ஆண்டு புத்தகத்தில் வெளிவந்துள்ளது. அதற்கு அப்போது பாராட்டுகளும், எதிர்ப்பும் கிளம்பியது.

ஆனால் அதனைக்கண்டுக் கொள்ளவில்லை. பிறகு இந்த அரசியல் நடவடிக்கைக்கு நான் வந்த பிறகு இது மிகப்பெரிய தவறு என உணர்கிறேன்.

இது இனவெறி என்பதனை உணர்ந்து அந்த தவறுக்காக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுபோன்ற தவறை நான் செய்திருக்கக் கூடாது” என அவர் தெரிவித்தார்.

18 வருடத்திற்கு முன்பு செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் செயலுக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பலர் இது அரசியலுக்காக செய்யும் நாடகம் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.