இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக பதவியேற்றார் திரெளபதி முர்மு…

இந்திய திருநாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்முக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா.
நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றார். கடந்த 18-ம் தேதி நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறங்கிய திரௌபதி முர்மு எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த சின்ஹாவை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிபெற்றார். இதனையடுத்து நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒடிசாவில் உபுர்பேடா என்ற கிராமத்தில் பிறந்து கவுன்சிலராக வாழ்க்கையைத் தொடங்கி எம்எல்ஏ, அமைச்சர், ஆளுநர் எனப் படிப்படியாக உயர்ந்து நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு இன்று பதவியேற்றுள்ளார்.நாடு விடுதலை அடைந்த பின் பிறந்த முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் பெற்றார்.

குடியரசுத் தலைவராக பதவியேற்பதற்கு முன்பு திரௌபதி முர்மு டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். .நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த திரௌபதி முர்முவை ராம்நாத் கோவிந்த் வரவேற்றார்
பாரம்பரிய வாகன அணி வகுப்பில் முர்முவும் நாடாளுமன்றத்தின் 5-வது நுழைவாயிலுக்கு அழைத்து வரப்பட்டார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, திரௌபதி முர்முக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு பதிவேட்டில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கையெழுத்திட்டார்.