கலைஞர் நினைவிடம் அருகே 137 அடி உயரத்தில் கடலுக்குள் பிரமாண்ட பேனா நினைவுச் சின்னம்..

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியைக் கவுரவப்படுத்தும் விதமாக, அவரது நினைவிடம் அருகே கடலினுள் 137 அடி உயர பேனா சின்னத்தை நிறுவ மத்தியஅரசின் ஒப்புதலை தமிழக பொதுப்பணித் துறை கோரவுள்ளது.

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். அவரது உடல் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில், ரூ.39 கோடியில் 2.21 ஏக்கர் பரப்பில் நினைவிடம் அமைக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டபோது, அவர் பயன்படுத்திய பேனாவும் உடன் வைத்து அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், பேனா வடிவிலான நினைவுச் சின்னத்தை கலைஞர் நினைவிடம் அருகில் கடலுக்குள் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இலக்கியத்தில் அவர் ஆற்றிய பணிகளை கவுரவிக்கும் விதமாக 42 மீட்டர் அதாவது 137 அடி உயரத்தில் பேனா போன்ற நினைவுச்சின்னம் கடலுக்குள் நடுவில் அமைக்கப்பட உள்ளது.

மேலும், பேனா’ நினைவுச்சின்னத்தை ஒட்டி புல்வெளிகள் உள்பட கண்ணை கவரும் வகையிலான கலை நயமிக்க ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன. கலைஞர் நினைவிடத்தில் இருந்து நடுக்கடலில் அமைக்கப்படும் ‘பேனா’ நினைவுச்சின்னத்துக்கு 290 மீட்டர் நிலப்பரப்பிலும், 360 மீட்டர் கடலின் மேலேயும் செல்லும் வகையில் 650 மீட்டர் நீளத்தில் பிரமாண்ட இரும்பு பாலம் நிறுவப்படுகிறது.

கடல் அலைகள் எழும்பும் மட்டத்தில் இருந்து 6 மீட்டர் உயரத்தில், 7 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட உள்ள இரும்பு பாலத்தில் பார்வையாளர்கள் கடலின் அழகை ரசித்தவாறு நடந்து செல்வதற்கு ஏதுவாக கண்ணாடியிலான பாதை வசதிகளும் செய்யப்பட உள்ளன.