இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு..

இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவானது.

கடந்த வெள்ளியன்று சுலவேசி தீவில் 7.5 ரிக்டரில் நிலநடுக்கமும், 170 முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டதைத் தொடர்ந்து பலு, டோங்கலா பகுதிகளில் சுனாமி தாக்கியது.

இந்த இயற்கை பேரழிவுகளால் இந்தோனேசியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பல கோடி மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளது. இயற்கையின் இந்த கோர தாண்டவத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே, தேவாலயம் ஒன்றின் இடிபாடுகளில் சிக்கியிருந்த மாணவர்கள் 36 பேரின் சடலங்களை மீட்புக்குழுவினர் இன்று மீட்டுள்ளனர்.

கடுமையாக பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கும் இந்தோனேசியாவுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு சர்வதேச நாடுகளுக்கு அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள சும்பா எனும் தீவில் 40 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழம் மையம் கொண்டு 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் அந்த தீவில் வசித்து வரும் நிலையில், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.