ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் மறுப்பு..

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்த போது ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீட்டை பெற அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியது.

இதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு சாதகமாக கார்த்தி சிதம்பரம் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளன. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்றம், அந்தத் தடையை அவ்வப்போது நீட்டித்து வந்தது.

இந்நிலையில் முன் ஜாமீன் கோரும் வழக்கில் கடந்த ஜனவரி மாதம் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

விசாரணைக்கு ஒத்துழைக்க சிதம்பரம் மறுப்பதாகவும், எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் ஏற்கனவே சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை ஏற்று ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து ப.சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யபட்டுள்ளது.