ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த பெருமை அதிமுக அரசையே சேரும் : முதல்வர் பெருமிதம்

தேனி தொகுதியில் பரப்புரை  மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும் என உறுதிபடத் தெரிவித்தார்.

தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து அலங்காநல்லூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்ம்புரை  மேற்கொண்டார்.

ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த பெருமை அதிமுக அரசையே சேரும் என அவர் குறிப்பிட்டார்.

அலங்காநல்லூரை தனி தாலுகா ஆக்கும் கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும், அலங்காநல்லூர் ஒன்றியத்திற்கு புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.

வீரன் காளையை அடக்குவது போன்ற சிலையுடன் ஜல்லிக்கட்டுக்கு நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.

விவசாயிகளின் நிலையை உயர்த்த பாடுபட்டு வருவதாகக் கூறிய அவர், ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படுவதாகவும், ஓடைகள், ஆறுகளில் தடுப்பணை கட்ட 1000 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அதிமுக அரசு சட்டப்போராட்டம் நடத்தியது என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தும் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவிடாமல் கேரள அரசு இடையூறு செய்வதாகக் குறிப்பிட்டார்.

நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று முன்னர் தேர்தல் அறிக்கையில் கூறிய திமுக, ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது அதை நிறைவேற்றியதா என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.