காரைக்குடி அருகே குடிநீர் தொட்டி பணியில் மிஞ்சிய மண் சாலை போட திருட்டு : வட்டாசியர் நடவடிக்கை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் ஊராட்சியில் கே.வி.எஸ் நகர் முதல் வீதியில் பாண்டியன் நகர் வரை பதினான்காவது நிதிக்குழு சார்பில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.ரூ 33 இலட்சம் மதிப்பில் சாலை அமையும் இந்த சாலை அமைப்பதற்கு தேவையான கிராவல் மண்ணை ஒப்பந்ததாரர் குவாரிகளில் வாங்காமல் கே.கே நகரில் கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டி பணியில் மிஞ்சிய மண்ணை இரவு நேரங்களில திருட்டுத்தனமாக அள்ளி வந்து பயன்படுத்துவதாக கூறி ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன்,ஊராட்சி கவுன்சிலர் கணபதி உள்பட அப்பகுதி மக்கள் சாலை பணியை நடக்க விடாமல் நிறுத்தினர்.


இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மருங்கிப்பட்டி ரமேஷ் என்பவர் கூறுகையில்,அரசுக்கு சொந்தமான கிராவல் மண்ணை திருடுவதோடு மட்டுமல்லாமல் சாலையின் இருபுறமும் இயந்திரங்களால் மண்ணை வெட்டி ஓரங்கள் அமைக்கின்றனர்.33 அடி சாலையில் 3 மீட்டர் மட்டுமே சாலை போடப்படுகிறது.ஓரங்களில் பள்ளமாக மண்ணை வெட்டி பயன்படுத்துவதால் சாலை குறுகிய சாலையாக மாறிவிடுகிறது.

மேலும் வீடுகளுக்கும்,பிளாட்டுகளுக்கும் முன்புறம் கால்வாய் போல் ஆகிவிடுகிறது. சாலை பணிக்கு தேவையான மண்ணை ஒப்பந்ததாரர் விலைக்கு வாங்கி வந்தே பயன்படுத்த வேண்டும்.அதிகாரிகள் தலையிட்டு கிராவல் மண் திருட்டை தடுக்க வேண்டும் என்றார்.


வட்டாசியர் மாணிக்கவாசகம் கூறுகையில்,பொதுமக்கள் தகவலின்பேரில் கிராம நிர்வாக அலுவலர் பார்வையிட்டார்.சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் எச்சரிக்கை விடுத்துள்ளோம்.சாலையின் இருபுறமும் தோண்டிய மண்ணை பரப்பிவிட்டு சரிசெய்ய உத்தரவிட்டுள்ளேன்.மீண்டும் தவறு நடக்கும் பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்