“காசி தமிழ்ச் சங்கமம்” : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்…

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெறும் ஒரு மாத நிகழ்ச்சியான ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்வை சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வு டிசம்பர் மாதம் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது. காசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான பண்டைய தொடர்புகளை புதுப்பித்துக் கொள்ளும் விதமாகவும், இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி ஆற்றிய உரை:

“உலகின் பழமையான நகரம் காசி. காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தில் இருந்து காசிக்கு வந்திருக்கும் எனது விருந்தினர்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.

நமது நாட்டில் பல்வேறு சங்கம பெருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. நதிகளின் சங்கமம், கொள்கைகளின் சங்கமம், ஞானம் மற்றும் விஞ்ஞானத்தின் சங்கமம், கலாச்சாரத்தின் சங்கமம் என அனைத்து சங்கமங்களும் விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன.

வேற்றுமையில் ஒற்றுமை கொண்டது நமது நாடு. அதைக் கொண்டாடவே காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி. காசியைப் போலவே தமிழ்நாடும் பழமை வாய்ந்தது. பழம்பெரும் கலாச்சாரத்தைக் கொண்டது. இவை இரண்டின் சங்கமமும், காசி தமிழ்ச் சங்கமம் எனும் ஒரு மாத கால நிகழ்ச்சியின் மூலம் கொண்டாடப்பட இருக்கிறது.

ஒரே உண்மை பல ரூபங்களில் வெளிப்படுகிறது என்பது நமது நாட்டின் கொள்கை. அப்படித்தான் காசியும் தமிழ்நாடும் இருக்கின்றன என்பது எனது எண்ணம். காசி, தமிழ்நாடு இரண்டுமே கலாச்சாரத்தில் சிறந்து விளங்குபவை. இரண்டுமே தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் சிறந்து விளங்குபவை. காசிக்கு விஸ்வநாதர் பெருமை சேர்க்கிறார்.

தமிழகத்திற்கு ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி பெருமை சேர்க்கிறார். இரண்டுமே சிவ மயமானது, சக்தி மயமானது. நமது நாட்டின் ஏழு புண்ணிய தீர்த்தங்களில் ஒன்று காசி; மற்றொன்று காஞ்சி. காசியும், தமிழ்நாடும் கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்குபவை. காசியில் பட்டு சிறந்து விளங்குவதைப் போலவே, தமிழ்நாட்டில் காஞ்சிப் பட்டு சிறந்து விளங்குகிறது. காசிக்கு துளசிதாசர் என்றால், தமிழ்நாட்டிற்கு திருவள்ளுவர்.