காயல்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 93.2 செ.மீ. கொட்டித் தீர்த்த கனமழை..

குமரிக்கடலில் கீழ்அடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 93.2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 93.2 செ.மீ கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. திருச்செந்தூரில் 67 செ.மீ மழையும், ஸ்ரீவைகுண்டத்தில் 61 செ.மீ மழையும் பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி காயல்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 932 மி.மீ. (ஒரு ஆண்டுக்கான மழை ஒரே நாளில் விழுவதை விட அதிகமான அளவு). இது தூத்துக்குடியில் 1000 ஆண்டுகளில் ஒருமுறை நடக்கும் நிகழ்வாக இருக்கலாம். இது புயல் கூட இல்லை, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கூட இல்லை. ஒரு புயல் சுழற்சியில் இருந்து பெய்யும் மழை. இது 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் சமவெளிப் பகுதிகளில் பதிவான அதிகபட்ச மழையும், 1992-ல் மாஞ்சோலையில் பதிவான 965 மி.மீ மழைக்கு 2வது அதிக மழையும் ஆகும்” இவ்வாறு வெதர்மேன் கூறியுள்ளார்.