கோவை முதலீட்டாளர்கள் மாநாடு : முதல்வர் முன்னிலையில் ரூ.34,723 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்…

கோவையில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.34,723 கோடிக்கு 52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. ரூ.34,723 கோடி முதலீடுகள் மூலம் 74,835 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2021 தொடங்கியது.

திமுக அரசு, ஆட்சிக்கு வந்த முதல் மாதத்திலேயே சென்னை கிண்டியில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது. தொடர்ந்து 2-வதாக சென்னை கலைவாணர் அரங்கில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இவ்விரு மாநாடுகளிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக ரூ.21 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சூழலில், அடுத்த கட்டமாக 3-வது முதலீட்டாளர்கள் மாநாடு கோவையில் இன்று தொடங்கியுள்ளது. கோவை கொடீசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழித்துறை கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். முதல்வர் தலைமையில் நடைபெறும் இம் மாநாட்டில், 40 முதல் 45 வெளிநாடு மற்றும் உள்நாட்டின் முன்னணி நிறுவனங்கள் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.