‘லிவ்விங் டுகெதர்’ பிரச்சனைகளுக்கு குடும்ப நல நீதிமன்றத்தை நாட உரிமையில்லை: உயர்நீதிமன்றம் திட்டவட்டம்..

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவர்கள், தங்களுக்குள் எழும் பிரச்சனைகளுக்கு குடும்ப நல நீதிமன்றத்தை நாட எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புவழங்கியுள்ளது.
திருமணம் செய்யாமலேயே ‘லிவ்விங் டுகெதர்’ என்று சேர்ந்து வாழ்பவர்கள் தங்களுக்குள் எழும் பிரச்சனைகளுக்கு குடும்ப நல நீதிமன்றத்தை நாட சட்டபூர்வ உரிமை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. கோவை இடையார்பாளையத்தை சேர்ந்த பெண், ஒருவரை 2013ம் ஆண்டு திருமணம் செய்ததாகவும் 2016 முதல் அந்த நபர் தனியாக வசித்து வருவதால் தங்களை சேர்த்துவைக்கக்கோரி கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அப்பெண்ணுக்கும் தனக்கும் திருமணம் நடக்கவில்லை என்று கூறி அவரது வழக்கை நிராகரிக்க முறையிட்டு சம்பந்தப்பட்ட நபர் மனுத்தாக்கல் செய்தார். இரண்டு மனுக்களையும் விசாரித்த கோவை நீதிமன்றம் அப்பெண்ணின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பெண் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் மற்றும் நீதிபதி விஜயகுமார் அடங்கிய அமர்வு, பண பரிவர்த்தனை தொடர்பான முன் விரோதத்தால் அப்பெண் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார் என்பது ஆதாரங்களில் இருந்து தெளிவாகி இருப்பதாக கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே குடும்பம் நடத்தி இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள், திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தவர்கள் தங்களுக்குள் எழும் பிரச்சனைகளுக்கு குடும்ப நல நீதிமன்றத்தை நாட எந்த சட்டபூர்வ உரிமையும் இல்லை என்று தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளனர்.