மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் : பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு..


மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இன்று (ஏப்.,27) கோலாகலமாக நடந்தது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,17 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. சித்திரை திருவிழாவின் 10 ம் நாளான இன்று மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது. கோயிலுக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது.

மீனாட்சி திருக்கல்யாணத்திற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து வந்த முருகப் பெருமானும், பவள கனிவாய் பெருமாளும் எழுந்தருள, மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருமண கோலத்தில், பிரியாவிடை அம்மனுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்ற சமயத்தில் பெண்கள் பலரும் தங்களின் தாலிக்கயிறை மாற்றிக் கொண்டனர்.