அடமானம் வைத்த மல்லையாவின் லண்டன் வீட்டை ஜப்தி செய்ய சுவிஸ் வங்கி நடவடிக்கை…

லண்டனில் உள்ள வீட்டை அடமானம் வைத்து ரூ.185 கோடி கடன் பெற்ற விஜய் மல்லையாவின் வீட்டை சுவிஸ் வங்கி ஜப்தி செய்ய அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கிங் பிஷ்ஷர் விமான நிறுவனத்தின் தலைவரும், பிரபல தொழிலதிபருமான விஜய் மல்லையா கடன் தொல்லைகள் காரணமாக இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டார்.

கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் இருந்து வெளியேறிய விஜய் மல்லையா தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.

17க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகளில் ரூ.9000 கோடிக்கும் அதிகமாக கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல், லண்டனுக்கு சென்றுவிட்டார்.

இதன் காரணமாக மல்லையா மீது இங்கிலாந்து உயர் வணிக நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

கடந்த 2012ம் ஆண்டு யுபி.எஸ்.ஏஜி என்ற சுவிஸ் வங்கியில் லண்டனில் இருக்கும் தனது வீட்டை அடமானம் வைத்து ரூ.185 கோடி கடன் பெற்றார்.

இந்த கடனை 5 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்துவதாக ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில் மல்லையா கூறிய அந்த 5 ஆண்டு காலமும் முடிந்துவிட்டது. அதன் பின்னரும், தான் திருப்பிச் செலுத்துவதாக கூறிய ரூ.185 கோடி கடனை இன்னமும் செலுத்தவில்லை.

இதையடுத்து, இங்கிலாந்து நீதிமன்றத்தில் சுவிஸ் வங்கி வழக்கு தொடர்ந்துள்ளது.

அதன்படி, லண்டன் வீட்டில் இருந்து மல்லையா குடும்பத்தினரை வெளியேற்றிவிட்டு அந்த வீட்டை தங்கள் வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த வழக்கு வரும் 2019ம் ஆண்டு மே 7ம் தேதி முதல் 10 நாட்களுக்கு விசாரணைக்கு வருகிறது. வழக்கின் தீர்ப்பு மல்லையாவுக்கு எதிராகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.