மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் தமிழ் மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் நியமனம்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து..


மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் தமிழ் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட கே.பாலகிருஷ்ணனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.பால கிருஷ்ணன் அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித்தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடி, அவர்கள் மத்தியிலும் அடித்தட்டு மக்கள் மத்தியிலும் நற்பெயர் பெற்றுள்ள திரு. பாலகிருஷ்ணன் அவர்கள், தன்னைத் தேர்ந்தெடுத்த தொகுதி மக்களின் பிரச்னை மட்டுமின்றி, மாநிலத்தில் உள்ள பல்வேறு முக்கியமான பிரச்னைகள் குறித்து சட்டமன்றத்தில் மிக ஆழமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் வாதங்களை எடுத்து வைத்தவர் என்பதை நானறிவேன்.

பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு, பலமுறை சிறை சென்றுள்ள அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பதவியில் சீர்மிகு பணியாற்றி வெற்றிபெற வாழ்த்துகிறேன்.