மீரட் விளையாட்டு பல்கலைக்கழகம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்..

உத்திரபிரதேச மாநில மீரட் நகரில் அமைக்கப்படும் விளையாட்டு பல்கலைக்கழகம் பல்நோக்கு மற்றும் நவீன விளையாட்டு உள்கட்டமைப்புகளுடன் அமைக்கப்படுகிறது.
உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைப்பதற்கான வேலைகளில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது.
இதனால் அம்மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசும், யோகி ஆதித்யநாத் அரசும் செயல்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், உத்தர பிரதேசம் மாநிலத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள மீரட் நகரில் அமைக்கப்பட்டுள்ள மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு இன்று அடிக்கல் நாட்டினார்.

சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டு பல்கலைக்கழகம் நிறுவப்படுகிறது. செயற்கை ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், கூடைப்பந்து, கைப்பந்து, கபடி மைதானம், டென்னிஸ் மைதானம், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம் உள்ளிட்டவை இங்கு அமைகின்றன.

துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக்ஸ், பளுதூக்குதல், வில்வித்தை உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பயிற்சி பெறும் வசதிகளும் இங்கு இருக்கும் என பிரதமர் அலுவகம் தெரிவித்துள்ளது.