சூலூர் பரப்புரை: திண்ணையில் அமர்ந்து பெண்கள், குழந்தைகளுடன் கலந்துரையாடல் நடத்திய ஸ்டாலின்

இடைத்தேர்தல் நடைபெறும் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் நடைபயணமாகச் சென்றும் திண்ணையில் அமர்ந்தும் பொதுமக்களுடன் கலந்துரையாடியும் பரப்புரை மேற்கொண்டார்.

ஆங்காங்கே கூடிய பெண்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை ஸ்டாலினிடம் மனம் விட்டு கூறினர். சென்ற இடங்களில், தாம் அதிகம் பேசாமல் மக்களை மட்டுமே அதிகம் பேசவைத்து ஸ்டாலின் கேட்டார்.

திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வரும் போது நிச்சயம் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும் அப்போது அவர் உறுதி கூறினார்.

பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என அனைவருடனும் புன்னகையுடன் கைகுலுக்கி ஸ்டாலின் செல்பி எடுத்துக்கொண்டார்.

கலங்கல் பகுதியில் தொண்டர்கள் கூட்டத்துடன் நடந்து சென்ற மு.க.ஸ்டாலின், அங்குள்ள ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்தவாறு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பட்டணம் இந்திரா நகர் பகுதியில் நடைபயணமாகச் சென்று வாக்கு கேட்ட மு.க.ஸ்டாலினிடம் பெண் ஒருவர் பிறந்து 15 நாள் ஆன தனது பெண் குழந்தையை கொடுத்து பெயர் சூட்டுமாறு கோரினார். குழந்தையை கையில் வாங்கிய ஸ்டாலின் கண்மணி என பெயர் சூட்டினார்.