நாசாவிற்கு செல்லும் தமிழக மாணவிக்கு முதல்வர் ரூ.2 லட்சம் நிதியுதவி…

நாசா சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவிக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்கா மற்றும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்கள் இணைந்து இணையம் வாயிலாக நடத்திய அறிவியல் தேர்வில் நாமக்கல்லை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி அபிநயா தேர்ச்சி பெற்றதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மாணவி அபிநயா அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி மையத்திற்கு செல்ல உள்ளார் என்றும், அவருக்கு தனிப்பட்ட முறையிலும், அரசு சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், அபிநயாவின் சாதனையை பாராட்டியும், வருங்கால இளைய தலைமுறையை ஊக்குவிக்கும் விதமாகவும் மாணவிக்கு 2 லட்சம் ரூபாய் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த அபிநயா, நிதியுதவி வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.