தேசிய குடிமக்கள் பதிவேட்டில் உண்மையான இந்தியர்கள் பெயர் விடுபடாது: ராஜ்நாத் சிங் உறுதி…


தேசிய குடிமக்கள் பதிவேட்டில் உண்மையான இந்திய குடிமக்கள் யாரும் விடுபட மாட்டார்கள், இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் பீதியை கிளப்பக்கூடாது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

அசாமில் குடியேறியுள்ள வங்கதேசத்தவர்களை கண்டறியும் பொருட்டு அம்மாநில அரசு, தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயார் செய்து வருகிறது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களைச் சரிபார்த்தல், ஆவணங்களைச் உறுதி செய்தல் என பல முறைகளில் அசாம் மாநில அதிகாரிகள் இந்த பதிவேட்டைத் தயார் செய்தனர்.

இதன் இறுதி வரைவுப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில், ஏராளமானோர் பெயர் விடுபட்டதாக புகார் எழுந்தது. வங்கதேசத்தவர் குடியேறும் பிரச்சினையை மதரீதியாக பாஜக கையாள்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த எம்.பி.க்கள், அமைச்சர்கள் என 8 பேர் குழுவினர் நேற்று தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக நடைபெறும் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள சென்றனர். சில்சார் விமான நிலையத்தில் அசாம் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இந்த விவகாரம் மாநிலங்களவையில் இன்று எதிரொலித்தது. இந்த பிரச்சினையை குறிப்பிட்டு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் பேசினர். இதற்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

அசாம் மாநிலத்தில் குடியேறிய வங்கதேசத்தவர்ககளை கண்டறிந்து வெளியேற்றும் நடவடிக்கை ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்திலேயே தொடங்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படியே தற்போது தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய குடிமக்கள் பெயர் விடுபட்டிருந்தால் அவர்கள் பெயரை மீண்டும் சேர்த்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. உண்மையான இந்திய குடிமக்கள் யாரும் இந்த பட்டியலில் விடுபட மாட்டார்கள். எதிர்கட்சிகள் இந்த விஷயத்தை அரசியலாக்கி மக்களிடம் பீதியை கிளப்ப முயற்சிக்கக் கூடாது’’ எனக் கூறினார்.