‘நீங்கள் நலமா’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..

“நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய “நீங்கள் நலமா” என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், புதுமை பெண் திட்டம் , முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என தேர்தல் வாக்குறுதிகளில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டும் கோடிக்கணக்கானோர் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த திட்டங்கள் அனைத்தும் பயனாளிகளை உரிய வகையில் சென்றடைகிறதா? என்பதை உறுதி செய்வதற்கு “நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்திலிருந்து, முதல்வரின் முகவரி துறையின் கீழ், பயனாளிகளைத் தொடர்பு கொண்டு அரசின் நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களைக் கேட்டறியும் புதுமை திட்டமான “நீங்கள் நலமா என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். பயனாளிகளிடம் நோடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த பின்னூட்டங்களைக் கேட்டறிந்தார்.
நீங்கள் நலமா திட்டத்தின் மூலம் முதலமைச்சர், அமைச்சர்கள், தலைமை செயலாளர், அனைத்து துறை செயலாளர்கள், துறையின் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோர் மக்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு திட்டங்கள் குறித்து கேட்டறியவுள்ளனர். பயனாளிகள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு திட்டங்கள் மேலும் செம்மைப்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப, கூடுதல் தலைமைச் செயலாளர்/ முதலமைச்சரின் செயலாளர்-| திரு.நா. முருகானந்தம், இ.ஆ.ப. முதல்வரின் முகவரித்துறை சிறப்பு அலுவலர் திரு.த.மோகன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.