நீட் தேர்வு கட்டுப்பாடுகள் என்னென்ன..?..

நீட் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகளுக்கு கடுமையான ஆடை கட்டுபாடு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் இதன்படி தான் ஆடைகள் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தேர்வுக்கு வருவோருக்கு, உடை மற்றும் உடல் சோதனை இருக்கும் என்பதால், அதற்கேற்ப முன்கூட்டியே, தேர்வு மையத்துக்கு வந்துவிட வேண்டும்.

விண்ணப்பத்தில் ஏற்கனவே பதிவேற்றம் செய்த, ஒரு பாஸ்போர்ட் புகைப்படத்தை, வருகை பதிவேட்டில் ஒட்டுவதற்காக எடுத்து வர வேண்டும்.

மாணவர்கள், தங்களுக்கான அரசு அங்கீகரித்த அடையாள அட்டை, ஏதாவது ஒன்றை எடுத்து வர வேண்டும்.

புத்தகம், துண்டு காகிதம், பேனா, பென்சில், பவுச், கால்குலேட்டர், ஸ்கேல், எழுதும் அட்டை, பென் டிரைவ், ரப்பர், லாக் அட்டவணை ஆகியவற்றிற்கும்,

எலக்ட்ரானிக் பொருட்களான மொபைல் போன், இயர்போன், கையில் அணியும் ஹெல்த் பேண்ட் மற்றும் கேமரா, பேஜர், வாட்ச் உள்ளிட்ட எந்த பொருளையும் எடுத்து வரக் கூடாது.

பெல்ட், தோள்பை, கைப்பை, தொப்பி, பர்ஸ் மற்றும் பிரேஸ்லெட் அணிந்து வரக்கூடாது.

நெக்லஸ், கம்மல், மூக்குத்தி, பிரேஸ்லெட் உள்ளிட்ட எவ்வித அணிகலன்களையும் அணிந்து வரக்கூடாது. அவற்றை பாதுகாத்து வைக்க, தேர்வு மையத்திற்குள் எந்த வசதியும் கிடையாது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாக்கெட் அல்லது டிபன் பாக்ஸ் உணவு வகைகள், தண்ணீர் பாட்டிலுக்கு அனுமதி இல்லை.

நீரிழிவு நோய் பிரச்னை உள்ளவர்கள், சுகர் மாத்திரை, ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்ச் போன்றவற்றை, தேர்வு மையத்துக்கு எடுத்து வரலாம். அதற்கு உரிய அதிகாரிகளிடம், முன் அனுமதி கட்டாயம் பெற வேண்டும்.

சாதாரண காலணிகள் மற்றும் குறைந்த உயரம் உள்ள காலணிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு. ஷூ மற்றும் சாக்ஸ் அணிந்து வரக்கூடாது. அரைக்கையுடன் கூடிய மெல்லிய ஆடைகள் மட்டும் அணிந்து வரலாம்.

முழுக்கை சட்டை அணிந்து வர அனுமதி இல்லை. உடைகளில் பெரிய பொத்தான்கள் மற்றும் பேட்ஜிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தேர்வரும், பகல், 1:15 மணிக்குள் இருக்கையில் அமர வைக்கப்படுவர். பாதியில் எழுந்து வருவது, முன்கூட்டியே விடை தாளை ஒப்படைத்து விட்டு வருவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.

நீட் தேர்வின் போது, தேர்வர்களுக்கு பேனா கொண்டு வர அனுமதி இல்லை என்பதால், தேர்வரையிலேயே மாணவர்களுக்கு பேனா வழங்கப்படும்.