ஆன்லைன் வகுப்பு: உரிய விதிகளை பின்பற்றி மாணவர்களின் அழுத்தத்தை நீக்க நடவடிக்கை எடுங்கள் : கனிமொழி எம்.பி…

கனிமொழி எம்.பி

ஆன்லைன் வகுப்பு: உரிய விதிகளை பின்பற்றி மாணவர்களின் அழுத்தத்தை நீக்க நடவடிக்கை எடுங்கள் : கனிமொழி எம்.பி…
ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் நிலை தொடர்வது தொடர்பாக அரசுக்கு வலியுறுத்தி ட்வீட் செய்துள்ளார் தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழி.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில், ஆன்லைனில் வகுப்புகளை நடத்தலாம் என தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இதனையடுத்து பல்வேறு தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், பல்வேறு தொழில்நுட்பக் காரணங்களாலும், வசதியின்மையாலும் மாணாக்கர்களால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத சூழல் நிலவுகிறது.
இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்கள் தற்கொலை என்ற தவறான ஆயுதத்தை ஏந்தும் அவல நிலை தமிழகத்தில் தொடர்ந்து வருகிறது. அவ்வகையில், தேனி மாவட்டத்தில் விக்கிரபாண்டி என்ற மாணவர், ஆன்லைன் வகுப்பு புரியாததால் சரியாக படிக்க முடியாமல் போயுள்ளது.

இதற்கு அவனது தந்தை திட்டியதால் மனமுடைந்த மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டான். அதுபோல, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே செல்போனை ஆன்லைன் வகுப்புக்கு பயன்படுத்தி வந்த சகோதிரிகளையே ஏற்பட்ட தகராறில் மூத்த சகோதரி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற அசம்பாவிதங்களை தடுக்க தமிழக அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், “ஆன்லைன் வகுப்புகளை கையாள முடியாமல், தொழில்நுட்ப வசதி இல்லாமல், தமிழக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் செய்தி அதிகரித்து வருகிறது. உளுந்தூர்பேட்டையை சேர்ந்த நித்யஶ்ரீ, தேனியை சேர்ந்த விக்கிரபாண்டி ஆகியோர் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

ஆன்லைன் வகுப்புகள் குறித்து உரியமுறையில் திட்டமிட்டு, வழிகாட்டுதல்களோடு அது செயல்படுத்தப்பட்டு, மாணவர்களின் அழுத்தத்தை நீக்க உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்