பென்னிகுவிக் இல்லத்தை இடித்து கலைஞர் நூலகமா?: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்..

‛‛மதுரையில் பென்னிகுவிக் இல்லத்தை இடித்துவிட்டு கலைஞர் நூலகம் கட்டப்படவில்லை,” என அ.தி.மு.க. எம்.எல்.ஏ., செல்லூர் ராஜூவின் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்றைய (ஆக.,25) கூட்டத்தொடரில், மதுரையில் பென்னிகுவிக் இல்லத்தை இடித்துவிட்டு கலைஞர் நூலகம் கட்டுவதாக முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வுமான செல்லூர் ராஜூ குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‛‛நூலகம் அமைய உள்ள இடத்தில் பென்னிகுயிக் வாழ்ந்ததாக கூறுவது தவறான கருத்து,” எனக் கூறினார்.

தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பென்னிகுவிக் இல்லத்தை இடித்துவிட்டு கருணாநிதி நூலகம் கட்டப்படவில்லை. ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள். இந்த அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுத்து மாற்ற தயாராக இருக்கிறது. இரண்டு முறை அமைச்சராக இருந்து, தற்போது எம்.எல்.ஏ.,வாக உள்ள செல்லூர் ராஜூ போன்ற மூத்த உறுப்பினர் எந்த ஆதாரமும் இல்லாமல் தவறான தகவலை அவையில் கூறக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.