கர்ப்பிணி பெண்கள் சுகாதார நிலையத்தில் பதிவு கட்டாயம் : சுகாதாரத்துறை அதிரடி..


இனி குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வேண்டுமென்றால் கர்ப்பிணி பெண்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பதிவு செய்ய வேண்டுமென சுகாதாரத்துறை அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சுகாதாரத் துறை அறிவித்துள்ளதாவது :

கர்ப்பிணி பெண்கள் தங்களின் விவரங்களை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பேறுசார் குழந்தை நல பதிவேடு மற்றும் ‘பிக்மி’ என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவின் அடிப்படையில் அந்த பெண்களுக்கு 12 இலக்க [RCH] எண் வழங்கப்படுகிறது.

இந்த எண்ணை பெற்றால் மட்டுமே குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 18 வயது நிரம்பாதவர்கள் மகப்பேறு அடைவது குறித்து கண்காணிக்க முடியும் என்றும், கர்ப்பிணிகளுக்கு மருத்துவ சேவைகள் அளிக்கவும், கண்காணிக்கவும் முடியும்.

RCH எண் இணையதளத்தில் பதிவிட்டால் மட்டுமே பிறப்பு சான்றிதழ் பெற முடியும் என தெரிவித்துள்ளனர்.