பெரியார் சிலை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை: பேரவையில் முதல்வர் எடப்பாடி பதில்..


பெரியார் சிலை உடைப்பு தொடர்பாக சட்டசபையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது அவர் பேசியதாவது: எச்.ராஜாவை கைது செய்யாததால் தான் பெரியார் சிலைகள் உடைக்கப்பட்டு வருகின்றன. அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்திருந்தால் பிரச்னை ஏற்பட்டிருக்காது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் அவரை கைது செய்யாதது ஏன்? இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு முதல்வர் பழனிசாமி அளித்த பதில்: பெரியார் சிலையை உடைத்தவர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை ஆலங்குடியில் பெரியார் சிலை உடைத்த நபர் 12 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர், திருப்பத்தூரில் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தில் பிரான்சிஸ், பா.ஜ., முத்துக்குமரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பெரியார் சிலை உடைக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார்.