‘வாக்குச்சாவடியில் நாம் மட்டுமே இருப்போம் புரிகிறதா?”: அன்புமணியின் பேச்சால் சர்ச்சை

திருப்போரூரில் வேட்பாளரை வாழ்த்திப் பேசிய அன்புமணி ராமதாஸ், ”இங்கு நமது வாக்குகள்தான் அதிகம்.

நமது ஆட்கள்தான் வாக்குச்சாவடியில் இருப்பார்கள். என்ன புரிகிறதா?” எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக தனித்தனியே கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.

இதில் எதிர் எதிர் துருவங்களாக அதிமுகவைக் கடுமையாக விமர்சித்து வந்த பாமக, தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவந்தது அதிமுக.

இதனால் அன்புமணி ராமதாஸ், ராமதாஸ் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிப் பேச வேண்டி வந்தது.

எட்டுவழிச்சாலையை எதிர்த்துவிட்டு இப்போது எங்களுடன் ஏன் கூட்டணி வைக்கிறீர்கள் என பொதுக்கூட்டத்தில் அதிமுக தொண்டர் ஒருவர் கேட்க அது பிரச்சினை ஆனது.

இதேபோன்று பல இடங்களில் அவர்களது நிலைப்பாட்டுக்கு எதிராக அவர்களே பேசுவது சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருப்போரூரில் வேட்பாளரை ஆதரித்து பேசிய அன்புமணி ராமதாஸ் பேசிய சர்ச்சைக் கருத்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கள்ள ஓட்டு போடுவதை ஊக்குவிக்கும் வகையில் அன்புமணி ராமதாஸ் பொதுமேடையில் தொண்டர்களைப் பார்த்து பேசியதாக அவர்மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

வேட்பாளரை ஆதரித்துப் பேசிய அன்புமணி, ”இங்கு நமது கூட்டணி ஆட்கள்தான் அதிகம். எதிரணியில் உள்ள திமுகவுக்கு கொஞ்சம் ஓட்டு உள்ளது.

கூட்டணியினர் கொஞ்சம் இருக்கிறார்கள். கூட்டணி கட்சியினருக்கு ஒரு செல்வாக்கும் இல்லை. தேர்தல் அன்று என்ன நடக்கும், பூத்தில் என்ன நடக்கும். நாம் தான் இருப்போம் பூத்தில்.

நம் ஆட்கள் மட்டும்தான் இருப்பார்கள். என்ன புரிகிறதா? அப்புறம் என்ன சொல்ல வேண்டுமா வெளியில்” என்று கேட்டார்.

இதற்கு அனைவரும் கை தட்டினர். வாக்குச்சாவடியில் நாம் மட்டுமே இருப்போம் புரிந்துகொள்ளுங்கள் என அன்புமணி கள்ள ஓட்டு போடத் தூண்டுகிறார் என எதிர்க்கட்சியினர் அவர் மீது புகார் தெரிவித்துள்ளனர்.