‘முஸ்லிம் லீக் வைரஸினால்’ காங்கிரஸ் அவதிப்பட்டு வருகிறது: யோகி ஆதித்யநாத் மீண்டும் சர்ச்சைப் பேச்சு

காங்கிரஸ் கட்சி முஸ்லிம் லீக் வைரஸினால் அவதிப்பட்டு வருகிறது என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதையடுத்து

காங்கிரஸும் யோகிதான் வைரஸ் தேர்தல் மூலம் இந்த ‘வைரஸ்’ களையப்படும் என்று பதிலடி கொடுத்துள்ளது.

கேரளா வயநாடில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்ததையடுத்து முஸ்லிம் வாக்குவங்கியை குறிவைக்கிறார் என்றும் மேதியில் இந்து வாக்கு வங்கிகளைக் குறிவைக்கிறார் என்றும் ராகுல்காந்தி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் தொடர்ந்து தேர்தல் களத்தில் சர்ச்சையாகத் தத்துபித்தென்று பேசி வரும் யோகி ஆதித்யநாத் அன்று இந்திய ராணுவத்தை மோடி ராணுவம் என்று வர்ணித்து அது அவர் கட்சியைச் சேர்ந்த வி.கே.சிங்குக்கே பிடிக்காமல் ‘இந்திய ராணுவத்தை மோடி ராணுவம் என்று கூறுபவர்கள் துரோகிகள்’ என்று சாடினார்.

இந்நிலையில் யோகி ஆதித்யநாத் தன் ட்விட்டர் பக்கத்தில், “முஸ்லிம் லீக் என்பது ஒரு வைரஸ். இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் பிழைக்க முடியாது.

இன்றைய தேதியில் முக்கிய எதிர்க்கட்சி காங்கிரஸ் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வென்றால் என்ன ஆகும் என்பதை சிந்தியுங்கள்.

இந்த வைரஸ் நாடு முழுதும் பரவி விடும்” என்று பதிவிட்டுள்ளார்.

கேரளாவில் காங்கிரஸும் முஸ்லிம் லீகும் நீண்டகாலமாக கூட்டணி கட்சிகளாகும்.

மங்கள் பாண்டேயை குறிப்பிட்ட யோகி:

1857 சிப்பாய் கலகம் பற்றியும் அதன் நாயகனாகக் கருதப்படும் மங்கள் பாண்டே பற்றியும் யோகி குறிப்பிடுகையில், “1857-ல் நாடு முழுதும் மங்கள் பாண்டேயுடன் பிரிட்டீஷாருக்கு எதிராக கிளர்ந்து எழுந்தது.

பிறகு வந்தது இந்த முஸ்லிம் லீக் வைரஸ் வந்து பரவியது, அதாவது நாடு பிளவுபடும் வகையில் பரவியது. இதே அச்சுறுத்தல் நாட்டின் மீது தற்போதும் கவிந்துள்ளது.

பச்சைக் கொடிகள் மீண்டும் பறக்கத் தொடங்கியுள்ளன. காங்கிரஸ் கட்சி முஸ்லிம் லீக் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது, எச்சரிக்கை” என்று கூறியுள்ளார்.

இதற்குப் பதிலடி கொடுத்த காங்கிரஸ் கட்சியின் சுர்ஜேவாலா, “ ‘போகி’ ஆதித்யநாத் என்ற வைரஸ் மிகப்பெரிய உ.பி. யில் வளர்ச்சியைத் தொங்க விட்டுள்ளார்.

உ.பி. மக்கள் இந்த வைரஸை சரி செய்ய வேண்டும். இந்த லோக்சபா தேர்தலில் இந்த வைரஸ் முற்றிலும் அகற்றப்படும்” என்று சாடியுள்ளார்.