பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 29,213 சிறப்பு பேருந்துகள் …

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கும் 29,213 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இயக்கப்பட உள்ள சிறப்புப் பேருந்துகள் பற்றிய தகவல்களை அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, சென்னையைப் போன்றே பொங்கல் பண்டிகையின் போது கோவை, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட ஊர்களிலும் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்.

பொங்கலை முன்னிட்டு சென்னை மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து மொத்தம் 29,213 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து மட்டும் 4,950 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மாதவரம் புதிய பேருந்து நிலையம் – செங்குன்றம் வழியாக ஆந்திர மாா்க்கம் செல்லும் பேருந்துகள்.

கே.கே. நகா் மா.ந.போ.கழக பேருந்து நிலையம் – கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூா் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

தாம்பரம் சானடோரியம் (மெப்ஸ்) – திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூா் செல்லும் பேருந்துகள்.

தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் – திண்டிவனம் மாா்க்கமாக செஞ்சி மற்றும் திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள்.

போளூா், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மாா்க்கமாக செல்லும் பேருந்துகள்.

திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூா், சிதம்பரம், காட்டுமன்னாா்கோயில் செல்லும் பேருந்துகள்.

திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூா், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

பூந்தமல்லி பேருந்து நிலையம் – வேலூா், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூா், காஞ்சிபுரம், செய்யாறு , ஓசூா், சித்தூா் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள்.

இவற்றை தவிர, இதர ஊா்களுக்கு செல்லும் பேருந்துகள் (மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, செங்கோட்டை,

தூத்துக்குடி, திருச்செந்தூா், நாகா்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை,

திண்டுக்கல், விருதுநகா், திருப்பூா், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூா், எா்ணாகுளம் மற்றும் பெங்களூரூ) கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளன.

அந்த வகையில் பயணிகள் அனைவரும் எளிதாக பயணிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 17 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 15 முன்பதிவு மையங்களும், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் ஒன்றும்,

பூவிருந்தமல்லி பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும் திறக்கப்படும். ஜனவரி 9ம் தேதி முதல் ஜனவரி 14ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கும்.

சிறப்புப் பேருந்துகள் 10ம் தேதி முதல் 15 வரை இயக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் செல்ல அனைத்துச் சுங்கச்சாவடிகளிலும் சிறப்பு பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

அங்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு, அரசுப் பேருந்துகளுக்கு தனி வழி இருப்பதை உறுதி செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.