பிரேமலதா சந்திரமுகி போல பேசுகிறார் : டிடிவி தினகரன் சாடல்…

பிரேமலதா சந்திரமுகி போல பேசுகிறார் என டிடிவி தினகரன் பேசியுள்ளார்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக கணபதி போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று (ஏப்ரல் 13) உளுந்தூர்பேட்டை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய தினகரன், “டிடிவி தினகரன் கட்சிக்கு வாக்களித்தால் ராகுல் காந்தி பிரதமராகாமல் மீண்டும் மோடி பிரதமராகிவிடுவார் என பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை.

2014ஆம் ஆண்டில் மோடி ஆட்சிக்கு வந்ததும் கறுப்புப் பணத்தை மீட்டுவந்து ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்று உறுதியளித்தார். 15 பைசா கூட வரவில்லை.

இளைஞர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் மோடி உறுதியளித்தார். அதுவும் நடக்கவில்லை.
ஜிஎஸ்டியை கொண்டுவந்து நமது வணிகர்களின் வியாபாரத்தை முடக்கியதுதான் மிச்சம்.

பணமதிப்பழிப்பு எனக் கூறி நமது பணத்தை அழித்துவிட்டு அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும் உதவி செய்துவிட்டார்.

இதனால் மற்ற மாநிலங்களில் ஏமாந்த மக்கள் மிகக் கோபமாக இருக்கின்றனர். இதனால் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது.