பிரியங்கா கணவர் ராபர்ட் வதேரா அமலாக்கத்துறை முன் ஆஜர்..

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் சுமார் 19 லட்சம் பவுண்டுகள் மதிப்பிலான சொத்து ஒன்றை வாங்கிய ராபர்ட் வதேரா,

மனோஜ் அரோரா என்பவருடன் சேர்ந்து இந்த தொகையை கள்ளத்தனமான பணப்பரிமாற்றம் மூலம் செலுத்தியதாக மத்திய பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள்

டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கில், தன் மீது அமலாக்கத்துறை கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ராபர்ட் வதேரா முன்ஜாமின் பெற்றார்.

வரும் 16-ம் தேதி வரை அவரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. பிப்ரவரி 6-ம் தேதி நடைபெறும் விசாரணையில் ராபர்ட் வதேரா ஆஜர் ஆவார் என்று அவரது வழக்கறிஞர் உறுதி அளித்தார்.

அதன்படி, பண மோசடி வழக்கு விசாரணைக்காக பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா இன்று மாலை 4 மணி அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜர் ஆனார்.

அவரது மனைவி பிரியங்கா காந்தியுடம் உடன் வந்திருந்தார். அலுவலகத்திற்குள் சென்ற பின்னர், பிரியங்கா அங்கிருந்து கிளம்பி செனறார். ராபர்ட் வதேரா ஆஜரான செய்தி அறிந்தவுடன் அமலாக்கத்துறை அலுவலகமே பரபரப்புடன் காணப்பட்டது.