ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் : வேட்புமனு தாக்கல் நிறைவு : ஒரே நாளில் 110 சுயேட்சைகள் மனுதாக்கல்..


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. மனுதாக்கலின் கடைசி நாளான இன்று மட்டும் 110 சுயேட்சைகள் மனுதாக்கல் செய்ய காத்திருந்தனர்.

ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏற்கனவே அதிமுக, திமுக சார்பில் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் மனுதாக்கலில் கடைசி நாளான இன்று ஏராளமான சுயேட்சைகள் மனுத்தாக்கல் செய்ய குவிந்தனர்.

அவர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு, மனுக்கள் பெற்றப்பட்டன. ஒரே நாளில் 110 பேர் சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்ய வந்தனர். இவர்களில் நடிகர் விஷாலும் ஒருவர். விஷாலுக்கு 68 வது டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

ஜெ., அண்ணன் மகள் தீபாவுக்கு 91வது டோக்கன் வழங்கப்பட்டது.

பகல் 3 மணிக்கு முன் மனுதாக்கல் செய்ய வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு மட்டும் மனுதாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகரில் போட்டியிடுவதற்காக இதுவரை தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் நாளை (டிச.,5) பரிசீலிக்கப்பட உள்ளன. மனுக்களை வாபஸ் பெற டிசம்பர் 7 ம் தேதி கடைசி தேதியாகும். அன்று மாலை, இறுதி வேட்பாளர் பட்டியல் தேர்தல் கமிஷனால் வெளியிடப்பட உள்ளது.