என் ராஜினாமாவை திரும்பப் பெற்றுவிட்டேன்: நவ்ஜோத் சிங் சித்து..

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. கேப்டன் அமரீந்தர் சிங் முதலமைச்சராக இருந்து வந்தார். அவருக்கு எதிராக எம்.எல்.ஏ.-க்கள் செயல்பட்டு, முதல்வரை மாற்ற வேண்டும் என டெல்லி மேலிடத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்து வந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
இதனால் அமரீந்தர் சிங் கடந்த செப்டம்பர் மாதம் 18-ந்தேதி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கிடையே செப்டம்பர் 28-ந்தேதி திடீரென நவ்ஜோத் சிங் சித்து, தான் வகித்து வந்த பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதோடு டெல்லி சென்று உயர்மட்ட தலைவர்களை சந்தித்து பேசினார். அவர் ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் சித்து எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார்.

சமரசம் மூலம் மனிதனுடைய குணத்தில் சரிவு ஏற்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தின் எதிர்காலம் மற்றும் பஞ்சாப் நலத்திட்டத்தின் குறிக்கோளில் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று சண்டிகரில் நிருபர்களை சந்தித்தார். அப்போது காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த முடிவை திரும்ப பெற்றுவிட்டேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும், ‘‘புதிய அட்டர்னி ஜெனரல் நியமிக்கப்படும்போது, நான் பதவி ஏற்றுக்கொள்வேன். என்னுடைய ராஜினாமா தனிப்பட்ட ஈகோ கிடையாது. அது ஒவ்வொரு பஞ்சாப் மக்களின் நலனைச் சார்ந்தது’’ என்றார்.