சத்துணவு ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ஆர்.நூர்ஜஹான் அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும்,

ஓய்வு பெறும்போது அமைப்பாளருக்கு ரூ. 5 லட்சம், சமையலர் உதவியாளர்களுக்கு ரூ. 3 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு ஊழியர்கள் கடந்த 25-ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை, தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ஆர்.நூர்ஜஹான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்படவுள்ளது. இந்தப் போராட்டத்தின் காரணமாக தமிழகம் முழுவதும் 47,000 சத்துணவு மையங்கள் இழுத்து மூடப்படும்.

56 லட்சம் மாணவர்கள் இந்தப் போராட்டத்தின் காரணமாக பாதிக்கப்படுவார்கள். 20,000 காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்களுடைய நியாயமான கோரிக்கைளை அரசு நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ஆர்.நூர்ஜஹான் கூறினார்.