செப்டம்பர் மாதம் ‘ஊட்டச்சத்து மாதமாக’ கடைபிடிக்க வேண்டும்: பிரதமர் மோடி..

பிரதமர் நரேந்திர மோடி மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல் நிகழ்வில் இன்று நாட்டு மக்களிடையே உரையாடினார். இந்த உரையில் செப்டம்பர் மாதம் ‘ஊட்டச்சத்து மாதமாக’ கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல இன்று கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையையும் அவர் நெகிழ்வாகக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். இந்த நாளில் புதியதாக எதையாவது வாங்கியும், வீட்டினை அலங்கரித்தும், பூக்களைப் பெருமளவில் கொண்டு கோலம் போடுவதையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த நாளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் நான்காவது அன்லாக் நடைமுறைக்கான வழிகாட்டுதலை வெளியிட்டிருந்தது. அதில் கட்டுப்பாட்டு மண்டலங்களைத் தவிர்த்துப் பிற இடங்களில் முழு முடக்கம் நீக்கப்படும் என தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

“அமெரிக்கா, ஐரோப்பா அல்லது வளைகுடா நாடுகளாக இருந்தாலும், ஓணத்தின் வீரியத்தை எல்லா இடங்களிலும் உணர முடியும். ஓணம் பெருகிய முறையில் சர்வதேச விழாவாக மாறி வருகிறது.” என மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியாக பொம்மைகள் தயாரிக்கப்பட வேண்டும் என்பதை கோரிக்கையாக மோடி வலியுறுத்தியுள்ளார். மேலும், இது சுயச்சார்பு இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

டிக்டாக் செயலிக்கு மாற்றாக ‘கூ’ மற்றும் ‘சிங்காரி’ செயலிகள் மக்களிடையே பிரபலமடைந்து வருகின்றதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், செப்டம்பர் மாதத்தை ‘ஊட்டச்சத்து மாதமாக’ கடைப்பிடிக்க வேண்டும். குழந்தைப் பருவத்தில் பெறப்பட்ட சரியான ஊட்டச்சத்து குழந்தையின் சரியான உடல் மற்றும் மன வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.