சிறிய வர்த்தகர்களுக்கு எளிய கடன் வசதி, இலவச விபத்து காப்பீடு: மத்திய அரசு புதிய திட்டம்..

வரும் மக்களவைத் தேர்தலில் சிறிய வர்த்தகர்கள், கடை உரிமையாளர்கள் ஆகியோரைக் கவரும் வகையில் எளிய முறையில் கடன் பெறும் வசதி,

இலவச விபத்து காப்பீட்டுத் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தத் திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள லட்சக்கணக்கான வியாபாரிகளையும், சிறிய கடை வைத்திருப்போர்களையும் கவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ‘ராய்டர்ஸ்’ செய்தி நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஏனென்றால், கடந்த 2016-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரியால் சிறிய கடைவைத்திருப்போர்,

சிறிய வர்த்தகர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு, அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

மேலும், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக தோல்வியைச் சந்தித்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த பாஜக அரசு, வர்த்தகத் தரப்பினரை சமாதானம் செய்யும் நோக்கிலும்,

மக்களவைத் தேர்தலில் இவர்களின் ஆதரவைப் பெறும் நோக்கிலும் திட்டமிட்டு வருவதாகப் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்துக்கு மின் அஞ்சல் மூலம் கேள்வி எழுப்பியும் அவர்கள் பதில் அளிக்கவில்லை.

ஆண்டுக்கு 50 லட்சத்துக்குக் குறைவாக விற்று முதல் செய்துவரும் சிறிய கடை உரிமையாளர்கள், வர்த்தகர்களுக்கு எளிய முறையில் கடன்வழங்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

மேலும், ஆண்டுக்கு ரூ.10 கோடி வரை விற்று முதல் வைத்துள்ள வர்த்தகர்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான இலவச விபத்துக்காப்பீடு வசதி அளிக்கவும் அரசு பரிசீலித்து வருகிறது.

மேலும், சிறிய கடை வைத்திருப்போர், வர்த்தகர்கள் ஆகியோர் தங்களுக்குத் தேவையான விபத்து காப்பீடு திட்டத்தை தேர்வு செய்யும் போது

அவர்களுக்குத் தள்ளுபடி அளிக்கும் திட்டத்தையும் பரிசீலித்து வருகிறது. இந்த அறிவிப்புகள் வரும் இடைக்கால பட்ஜெட்டில் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசில் பதிவு செய்துள்ள வர்த்தகர்கள் தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்து ஓய்வில் இருந்தால், அவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் திட்டம்,

பெண் வர்த்தகர்கள் வங்கியில் கடன் பெற்று கடனைத் திருப்பிச் செலுத்தும் போது வட்டியில் தள்ளுபடி அளித்தல் போன்ற திட்டங்களும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிரவின் கந்தேல்வால் கூறுகையில், “ 70 லட்சம் சிறு வர்த்தகர்களில் 4 சதவீதம் பேர் மட்டுமே வங்கியில் முறையாகக் கடன் பெற்று தொழில் செய்கிறார்கள்.

தனியார் கடன் வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து 30 சதவீதம் கடன் பெற்று பலர் தொழில் செய்கிறார்கள். பெரும்பகுதி தனியாரிடம் இருந்து கடன் பெற்று வர்த்தகம் செய்து வருகிறார்கள் “ எனத் தெரிவித்தார்.