ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்ற சித்திரைத் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேர் திருவிழாவானது ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

திருவிழாவின் 9ஆம் நாளான இன்று அதிகாலை, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து சீர் வரிசையாக வந்த கிளிமாலையை அணிந்த படி மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா என பக்தி பரவசத்துடன் திருத்தேரை வடம்பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.

சித்திரைத் தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் சித்திரைத் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறையும் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது