ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் மு.க.ஸ்டாலின் பேச்சு…

ஓபிசி இட ஒதுக்கீடு வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மு.க ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளிட்டுள்ள பதிவில், ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்ததாகவும், அதைத்தொடர்ந்து அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது, மருத்துவ படிப்பில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பிரதமரிடம் சுட்டிக்காட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மத்திய-மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள், இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் இணைந்து இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறைகள் குறித்து மத்திய அரசு உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகக் கூறியுள்ள ஸ்டாலின், பாதுகாப்பற்றவர்களை நாம் தொடர்ந்து பாதுகாப்போம் என்று தெரிவித்துள்ளார்.